Sunday, July 26, 2009

இவளை விட அவளே மேல்

இவளை விட அவளே மேல்


இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கி விட்டது. தமிழகத்தின் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் 18.08.2009 அன்று நடக்க இருக்கிறது. தொண்டாமுத்தூர் ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸும் இளையாங்குடி, கம்பம், பர்கூர் தொகுதிகளில் திமுகவும் போட்டியிடுகின்றன.

வழக்கம் போல திருமங்கலம் இடைத்தேர்தலின் போது வாக்காளப் பெருங்குடி மக்களின் கைகளில் கத்தை கத்தையாக பணம் புழங்கியது போன்று இந்த தொகுதிகளின் வாக்காளர்கள் கைகளிலும் அரசியல் கட்சிகளின் பணம் புழக்கத்திற்கு வர இருக்கிறது.

லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் மிகப்பெரும் குற்றம் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் சொல்கிறது. இந்த சட்டத்தை இயற்றும் அவைகளுக்கு செல்லக் கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து ஓட்டுக்களை பெற்று சட்டம் இயற்றும் அவைகளுக்கு செல்ல இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பட்டப்பகலில் தன் மனைவி சோரம் போகிறாள் என்றால், அதை எந்தக் கணவனாவது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பானா? அதைப் போல பட்டப்பகலில் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளோடு பணப்பட்டுவாடா நடக்கிறது, அதை ஜனநாயகத்தின் தூணாகிய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையர் பார்த்துக் கொண்டிருக்கிறார். பணம் பட்டுவாடா செய்யப்படுவது உண்மைதான், ஆனால் அதை எங்களால் தடுக்க முடியவில்லை என்கிறார். முன்பு நாம் சொன்ன உதாரணத்தை இங்கே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதை தடுக்க முன்வராத தேர்தல் ஆணையம் ஏன் இந்தப் பணியை செய்ய முன்வர வேண்டும்? இந்த அடாவடித்தனத்தை தடுக்க அதிகாரம் அற்றதாகவா தேர்தல் ஆணையம் இந்திய திருநாட்டில் இருக்கிறது.

தேர்தல் ஆணையம் தூங்கி வழிந்து கொண்டிருக்காமல் பணப்பட்டுவாடாவை தடுக்க உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

வாக்குப் பதிவு இயந்திரத்தில் பல படித்தட்டு ரகசிய கடவுச் சொற்கள் முறையே இல்லை. கம்பியூட்டர் தொழில் நுட்ப கலைஞர் மனது வைத்தால் எப்படி வேண்மானாலும் அதில் ப்ரோக்கிராம்களை எழுதலாம் என்ற நிலை இருக்கும் போது, வெறுமனே புதிய இயந்திரங்களை இடைத்தேர்தலில் பயன் படுத்தப் போகிறோம் என்று சொல்வது தமிழ்நாட்டு மக்களை கேணையன்களாக ஆக்குவதற்கு ஒப்பானதாகும்.

பல சம்பவங்கள் நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் நடந்தது. அப்பட்டமாகவே அது நடந்தது, சில நிமிடங்களில் தோற்றவர் வென்றவராகவும், வென்றவர் தோற்றதாகவும் அறிவிப்புக்கள் வெளியாகின.

இருந்தும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு இல்லை என்று தேர்தல் ஆணையத்தின் அறிக்கை ஒரு பக்கம் இருந்தாலும் எமது பழைய உதாரணத்தின் படி மனைவி நடத்தை கெட்டவள் என்ற சந்தேகம் உள்ளத்தில் ஏற்பட்டு விட்ட பிறகும், அதற்குப் பல ஆதாரங்கள் இருந்தும், எந்த கணவனாவது அவளோடு குடும்பம் நடத்துவானா? அப்படிப்பட்டவன் தன்மானமுள்ள ஆண்மகனாக இருக்க முடியுமா? அது போல வாக்குப்பதிவு இயந்திரம் என்ற நடத்தை கெட்டவள் மீது தமிழக மக்களுக்கு உறுதியான கெட்ட நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. இவளை விட அவளே மேல், ஜனநாயகம் என்ற குடும்பம் பிழைக்க வேண்டுமானால் தேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கைகளில் இறங்கியாக வேண்டும்.

இப்னு ஃபாத்திமா
26.07.2009

(குறிப்பு: இடைத்தேர்தல் வரும் வரை எந்த நடவடிக்கைகளிலும் தேர்தல் ஆணையம் இறங்காத நிலையில், வாக்குப் பதிவு இயந்திரத்திற்கு பதிலாக வாக்குச் சீட்டு முறைதான் சரியான தீர்வு என்ற நிலையில், வாக்குப்பதிவு துவங்க அரை மணிநேரமே இருக்கும் போது, ஒவ்வொரு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மேல், கட்சியின் சின்னத்தை வரிசைப் படுத்தும் போது குலுக்கல் முறையில் வரிசைப் படுத்தினால் சிறிதளவு சந்தேகத்தை தவிர்க்கலாம். அப்படிச் செய்தால் முதல் நம்பரில் வழக்கம் போல் வரும் உதயசூரியன் சின்னம் குலுக்கல் முறையில் மற்ற எண்களில் வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் பெருமளவு மோசடி தவிர்க்கப்படும். இது எமது யோசனை தான். இருந்தாலும் வாக்குச் சீட்டு முறைதான் வேண்டும்.)

0 Comments:

Post a Comment

<< Home