Tuesday, March 01, 2011

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்!-மே 13ம் தேதி முடிவு வெளியாகும்!!

செவ்வாய்க்கிழமை, மார்ச் 1, 2011,

டெல்லி: தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும். அன்றைய தினம் பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.

அதே போல புதுச்சேரி, கேரள மாநில சட்டசபைகளுக்கும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. ஆனால், நக்ஸல் பாதிப்புக்குள்ளான மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் ஆறு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. அதே போல அஸ்ஸாமில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல்
நடக்கிறது.

தமிழக சட்டமன்றத்தின் ஆயுட் காலம் வரும் மே மாதம் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அந்தத் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு புதிய சட்டசபை அமைக்கப்பட்டாக வேண்டும்.

இதையடுத்து ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் 6 கட்டங்களாகத் தேர்தல் நடப்பதால் வாக்கு எண்ணிக்கை சரியாக ஒரு மாதம் கழித்து மே 13ம் தேதி நடக்கவுள்ளது. தமிழகத்தில் ஓட்டுப் பதிவு முடிந்து ஒரு மாதம் கழித்து தேர்தல் முடிவு வெளியாகப் போவது இதுவே முதல் முறையாகும்.

தேர்தல் நடக்கவுள்ள 5 மாநிலங்களிலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்டன. இந் நிலையில் தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களும் இன்று கூடி இறுதிக் கட்ட ஆலோசனையை நடத்தினர். இதையடுத்து மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் தேர்தல் தேதிகளை அறிவித்தனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறுகையி்ல், தமிழகத்தில் 4.59 கோடி வாக்காளர்களும் புதுச்சேரியில் 80 லட்சம் வாக்காளர்களும் உள்ளன. மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் தான் ஓட்டுப் பதிவு நடைபெறும். முதல் முறையாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலுடன் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 54,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடத்தப்படும். 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கும். மார்ச் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும்.

தமிழகத்தில் 99.98 சதவீதம் பேருக்கு புகைப்பட வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுவிட்டது. வாக்காளர் அடையாள அட்டையைக் கண்டிப்பாக காட்டித்தான் வாக்களிக்க வேண்டும். அது இல்லாதவர்களுக்கு மாற்று ஆவணங்களை அறிவித்துள்ளோம்.

இந்த தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதல் முறையாக வாக்களிக்க
அனுமதிக்கப்படவுள்ளனர்.

இதேபோல கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபைக்கும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். அஸ்ஸாமில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்.

தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. பீகார் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சியினர் சோதனையிட அனுமதிக்கப்பட்டது. அதே நடைமுறை இந்த ஐந்து மாநிலத் தேர்தலிலும் பின்பற்றப்படும் என்றார்.

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால் அரசு புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம்-தேர்தல் அட்டவணை:

வேட்பு மனு தாக்கல் - மார்ச் 19

மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் - மார்ச் 26

மனுக்கள் பரிசீலனை - மார்ச் 28

மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் - மார்ச் 30

வாக்குப் பதிவு - ஏப்ரல் 13

வாக்கு எண்ணிக்கை - மே 13

Thanks: thatstamil


0 Comments:

Post a Comment

<< Home