Friday, March 30, 2007

இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

பொது வேலை நிறுத்தத்திற்கு த.மு.மு.க. ஆதரவு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை

இன்றைய தினம் அதிர்ச்சிகரமான தீர்ப்பொன்றை உச்சநீதிமன்றம் வாசித்துள்ளது. மத்திய அரசின் உயர்கல்விக் கூடங்களில் பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற இடைக்காலத் தீர்ப்பு சமூக நீதியின் மீதும், நாட்டின் பெரும் பான்மையாக இருக்கும் அடித்தட்டு மக்களின் நம்பிக்கைகளின் மீதும் விழுந்துள்ள பேரிடியாகவே கருத வேண்டியுள்ளது.

சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டிற்கு அறிவியல் காரணங்களைத் தேடும் உச்சநீதி மன்றம், நாட்டின் உண்மையான நிலவரத்தைக் கருத்தில் கொள்ளாமல் பிற்போக்குத்தனமான எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளது.

இடஒதுக்கீடு விவகாரங்களில், அளவை நிர்ணயிக்கும் முடிவுகளை அந்தந்த மாநிலங்களே தீர்மானித்துக் கொள்ளும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

மத்திய அரசு பதவிகளிலும், உயர்கல்விக் கூடங்களிலும் தேசிய அளவிலான பிற்படுத்தப்பட்ட சமூகங்களை கருத்தில் கொண்டு இடஒதுக்கீடு வழங்கும் வகையிலும் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று த.மு.மு.க. கேட்டுக் கொள்கிறது.

உச்சநீதிமன்றம் உயர்சாதி பற்றாளர்களின் ஆதிக்கத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், இடஒதுக்கீடு விவகாரத்தில் நாடாளுமன்றமே இறுதி முடிவெடுக்க வேண்டும்.

இந்த எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையிலும், உச்சநீதிமன்றத்தின் இடைக் காலத் தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் 31/03/2007 அன்று நடைபெற விருக்கும் பொது வேலை நிறுத்தத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

சமூக நீதி போராட்டத்தில் எல்லோரின் குரலும் ஒருமித்து ஒலிக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளையும் த.மு.மு.க. கேட்டுக் கொள்கிறது.

அன்புடன்
(எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்)

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்


0 Comments:

Post a Comment

<< Home