Wednesday, June 16, 2010

நான் பழிவாங்கப்படுகிறேன்: ஐஏஎஸ் அதிகாரி மனு

நான் பழிவாங்கப்படுகிறேன்: ஐ.ஏ.எஸ். அதிகாரி உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை, ஜூன் 16: அமைச்சரை தண்டிக்கப் பரிந்துரைத்ததால், தாம் பழிவாங்கப்படுவதாக தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார்.

அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநராக இருந்தபோது சுமங்கலி கேபிள் டி.வி.யை தேசியமாக்கவும், அமைச்சர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்பு சட்டங்களில் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தேன். அதன் காரணமாக, இப்போது பழிவாங்கப்படுகிறேன் என்று மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீதான ஊழல் தடுப்பு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் உமாசங்கர் தாக்கல் செய்த மனு விவரம்:

தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 1991-ம் ஆண்டு பதவியேற்றேன். பதவி ஏற்றது முதல் எந்தவித புகாருக்கும் ஆளாகாமல் நேர்மையாகப் பணியாற்றி வருகிறேன். அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக 2008, அக்டோபர் 30-ம் தேதி நியமிக்கப்பட்டேன். சன் டி.வி. குழுமத்துக்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் டி.வி. நிறுவனம் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை முடக்க அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டது.

இந்த முயற்சிகளில் இருந்து அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்டேன். சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் சட்ட விரோத நடவடிக்கைகளையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன்.

சுமங்கலி கேபிள் நிறுவனத்தை தேசியமயமாக்குவதுடன், அமைச்சர் ஒருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தேன். இதையடுத்து, சிறுசேமிப்புகள் துறை ஆணையராக நான் பணியிடமாற்றம் செய்யப்பட்டேன். இப்போது அரசு கேபிள் டி.வி. நிறுவனம் செயலிழந்து காணப்படுகிறது.

சுமங்கலி கேபிள் நிறுவனத்தை தேசியமயமாக்க வேண்டும் என்ற பரிந்துரைத்த காரணத்தால், என் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டது. சட்ட விரோதமான இந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி ஊழல் தடுப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் என்னிடம் விசாரணை நடத்தினார். ஆனால், என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதால் அவ்வப்போது எனது சொத்து விவரங்களை அரசிடம் சமர்ப்பித்து வருகிறேன். என் மீது விசாரணை நடத்துவதற்கு சட்டப்படி அனுமதியும் பெறப்படவில்லை.

நேர்மையாகவும், பொதுமக்களுக்கு நன்மை தரும் வகையிலும் செயல்பட்டதால் என் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஊழல்வாதிகளையும், அதிகாரம் மிக்கவர்களையும் காப்பாற்றும் அரசு, அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்ததால் என்னை பழிவாங்குகிறது.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக போதுமான ஆதாரங்கள் இருந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், விசாரணை என்ற பெயரில் என் மீதும், எனது குடும்பத்தினர், நண்பர்கள் மீது போலீஸôரை ஏவி விட முடியாது. இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி வி.தனபாலன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதுதொடர்பாக, தமிழக அரசு ஜூன் 28-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீதான ஊழல் தடுப்பு போலீஸôரின் விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Dinamani 17.06.2010